Wednesday, August 24, 2011
முதுமை
முதுமையை சிறைவைத்திருந்தது இளமை
இளமையை கொன்றுவிட்டது
முதுமை
கவிதை
மனதைச் சாறு பிழிந்தேன்
வடிந்தன துளிகள்
காகிதத்தில்
கோடை
கடல் நீர் அருந்தாத
கோடைவெயிலுக்கு
குளத்து நீர் விருந்தானது
கண்ணாடி
நிஜம் நிழலின்முன்
தலை பணிந்தது
கண்ணாடி
வளயல்கள்
அவளின் கரங்களில் தழுவும்வரை
சிரித்துக் கொண்டுதானிருக்கும்
இந்த வளயல்கள்
நூலகம்
மலர்கள் மணம்பறப்பின
மரங்கள் இல்லாத
பூங்காவனத்தில்........!
வெங்காயம்
என்னைத் தோலுரிக்கிறார்கள்,
அவர்களின் கண்களில்
கண்ணீர்.......!
சூரியன்
விண்ணிலே ஒரு துளி
மண்ணிலே பேரொளி
சூரியன்
நூல் நிலையம்
அறிவாளிகள் அமர்ந்திருக்கிறார்கள்
புத்திசாளிகள் வந்து போகிறார்கள்
நூல் நிலையம்
Tuesday, August 23, 2011
வாழை மரம்
சந்ததி பிறந்தது
உடன் சங்கதி முடிந்தது.
வாழை மரம்
மலர்ச்சாடி
வேர்கள் மட்டுமல்ல
பூக்களும்தான் அனுபவிக்கின்றன
ஆயுள் தண்டனை
ஏணி
ஒரு முடம்
முன்னேறிச் செல்ல
தோள் கொடுக்கிறது
நட்சத்திரங்கள்
பூமி இருளுக்குள் புதைந்து
திண்டாடும் போது
வானில் மட்டும் கொண்டாட்டம்
மின்னல்
மேகங்கள் கூடி இடித்ததில்
வான் சுவரில் வெடிப்பு
மின்னல்
பாதை
வளைந்து போனதொரு வீதி
எல்லோரும் சொல்கிறார்கள் இது
நேரான பாதை என்று
நவீன உலகம்
கப்பல்கள் மட்டுமல்ல
ப்போது கட்டிடங்களும் தரிக்கின்றன
கடலில்
பூ மாலை
மனிதனின் புகழ்
தூக்கிவிடப்பட்டது
மலர்களோ தூக்கிலிடப்பட்டது
இயந்திமும் எரிபொருளும்
வேர் அருந்தாத நீரை
நீ அருந்துவதால்தானே
போர் விரிந்திருக்கிறது
மேளம்
நீ அடிவாங்கும் போது
நான் ரசிக்கின்றேன்
உன்மீது அவ்வளவு பிரியம் எனக்கு
இளனி வியாபாரி
எல்லோரும் அருந்துகிறார்கள்
எங்களுடைய தாகம்
தணிகிறது.....!
Monday, August 22, 2011
பனிமலை
தலை நரைத்தபோதிலும்
இளமையாகத்தான் இருக்கிறது
மலை
மீன்கள்
தண்ணீருக்குள் உலவு
தரைக்கு வந்தால்
உணவு
குடை
மரங்கள் தேவையில்லை
மழையடித்தால் போதும்
கரங்களில் பூக்கள் பூக்கும்
இரவு வானம்
உயிரிழந்தது உலகம்
விதவையானது நிலவு
இரவு வானம்
கண்கள்
திக்கெட்டையும் காட்சிப்படுத்தும்
இக்கட்டிலே காட்டிக்கொடுக்கும
கண்கள்
தீக்குச்சி
தலைவன் பிரகாசிப்பதற்காக
தீக்குளித்தான் தொண்டன்
தீக்குச்சி
மின்னல்
மரத்தினுச்சியில் வேர்விரிந்தது
மண்ணின் மடியினில்
மரம் சரிந்தது...!
Sunday, August 21, 2011
கூந்தல்
நிலவைச் சுற்றிலும்
மழைபெய்யாத கருமுகில்கள்
கூந்தல்
கண்கள்
அழகை ரசிக்க மட்டுமல்ல
அழவும்தான்
கண்கள்
உதடுகள்
அழகிய ரோஜாப்பூ
முள்ளும் இருக்கிறது
உள்ளே
ஒற்றுமை
ஒரு குடைக்குள் கிடைக்கிறது
ஒரு கூரைக்குள் கிடைப்பதறிது
ஒற்றுமை
நெருப்பு
விரலை வைத்தால் சுடுகின்றது
சிலரின் நெஞ்சுக்குள்ளே சுடர்கின்றது
நெருப்பு
பூக்கள்
வாசனையை மட்டுமல்ல
வண்டுகளையும் தான் சுமக்கிறது
பூக்கள்
சாடியில் பூக்கள்
சிறைப்பட்டிருக்கிறது
இருந்தும் சிரித்துக்கொண்டிருக்கிறது
சாடியில் பூக்கள்
கண்கள்
விருந்து படைக்கும்
அதில் விஷமும் இருக்கும்
கண்கள்
Friday, August 19, 2011
வானம்
தூணில்லாத கூரை
விழுந்தது நடுக்கடலில்
வானம்
நிலவு
அனைத்தையும் விழுங்கிய இருள்
ஒருதுளியை மட்டும் கக்கியது
நிலவு
மீன்கள்
தண்ணீருக்குள் இரணம்
தப்பிக்க நினைத்தால் மரணம்
மீன்கள்
நீர் கெண்டி
பொழுது விடிந்ததும்
கூவியது நகரத்து சேவல்
நீர் கெண்டி
மின்னல்
வான்சுவரில் மின்சாரக்கசிவு
அனைந்துபோனது சூரியவிளக்கு
மின்னல்
வென்மேகங்கள்
பற்றிக் கொள்ளாமல் பஞ்சு
பக்கத்திலே தீச்சுவாலை
வென்மேகங்கள்
பாலைவனம்
தண்ணீர் இல்லாத கடலில்
நுரையில்லாமல் அலைகள்
பாலைவனம்
மொட்டுக்கள்
பூக்களின் புன்னகையை
பொத்தி வைத்துக்கொண்டன
மொட்டுக்கள்
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)